முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

வளரிளம் பருவத்தினரிடையே வளர்ந்து வரும் உடற்பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்கள்

Read time: 1 min
பெங்களூரு
1 ஜூன் 2020
வளரிளம் பருவத்தினரிடையே வளர்ந்து வரும் உடற்பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்கள்

உலகெங்கிலும் வாழ்வியல் நோய்கள்  பெரிதும் ஆதிகரித்து வருகின்றன. கட்டுக்கடங்கா வகையில் உடலில் அதீதமாக எடை கூடுவதை உடற்பருமன் நோய் என்கின்றனர். கொழுப்பை சேமித்து வைப்பது உடலுக்கு ஒரு இயல்பான செயல்பாடாக இருப்பினும், அதீதமாக கொழுப்பு சேர்வது பல உடல் நலக்கேட்டிற்கு வழிவகுக்கின்றது. வாழ்வியல் நோய்களின் அடிப்படையான உடற்பருமன் இன்று உலகளாவிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 1975 முதல் கடந்த நான்கு தசாப்தங்களாக, அதிக எடை மற்றும் உடற்பருமன் சார்ந்த  தனிநபர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டில் மட்டுமே உலகளவில், ஐந்தில் ஒரு குழந்தை உடற்பருமனால் பாதிக்கப்படுவதாகவும், அதில் பாதிக்கும் மேற்பட்டோர் ஆசியர்கள் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. முன்பு வளர்ந்த மற்றும் அதிகம் வருமானம் கொண்ட நாடுகளில் மட்டும் அதிகம் காணப்பட்ட உடற்பருமன் எனும் வாழ்வியல் நோய், இன்று நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் உள்ள நாடுகளிலும் உயர்ந்துள்ளது, குறிப்பாக நகரங்களில்.

உடற்பருமனால் ஏற்படும் உயர் இரத்த அழுத்த நோயும் பல நாடுகளில் அதிகமாக உள்ளது. இந்தியாவில், உடற்பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம், இவற்றிருக்கான தொடர்பு குறித்த பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புற குழந்தைகள் மற்றும் வாளரிளம் பருவத்தினரிடையே இந்நோயின் தாக்கம் குறித்த ஆய்வுகள் நம் நாட்டில் மிகக்குறைவு. இந்தியா மற்றும்  இங்கிலாந்து விஞ்ஞானிகள் நடத்திய சமீபத்திய ஆய்வில் வடஇந்திய வளரிளம் பருவத்தினருக்கும் இருக்கும் உடற்பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் குறித்த ஆய்வு வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் பிஎம்ஜெ ஓப்பன் (BMJ Open) எனும் ஆய்வு சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்விற்காக பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்டத்தில் உள்ள கிராமம் மற்றும் நகர்ப்புற பள்ளிகளில் இருந்த மாணவர்களிடம் தரவுகள்  சேகரிக்கப்பட்டது. பதினொன்று முதல் பதினேழு வயதிற்குட்டபட்ட 849 நகர்ப்புற மற்றும் 1110 கிராமப்புற பங்கேற்பாளர்கள் இந்த ஆய்வில்  பங்குகொண்டனர். ஆய்வாளர்கள், மாணவர்களின் இரத்த அழுத்தம், உடல் நிறை குறியீடு  முதலிய தரவுகளை சேகரித்தனர். அவர்களின் சமூக-பொருளாதார நிலை, உணவு பழக்கம் மற்றும் உடல் செயல்பாடு முதலியவைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன.

முந்தைய ஆய்வுகளில், இந்தியாவில் இரத்த அழுத்தத்தின் நோய் பரவல் குழந்தைகளிடையே 1 முதல் 16.2 சதவீதம் இருப்பதாக கண்டறியப்பட்டது. உடற்பருமன் 12 முதல் 19 சதவீதம் இருப்பதாக கண்டறியப்பட்டது. தற்போதைய ஆய்வு இந்த வரம்புகளைச் சுருக்கி, உயர் இரத்த அழுத்தத்தின் பரவலானது கிராமப்புறங்களில் 5.7% ஆகவும், நகர்ப்புறங்களில் 8.4% ஆகவும் உள்ளது என கண்டறிந்துள்ளது. மறுபுறம், உடல் பருமன் பாதிப்பு கிராமப்புறங்களில் 2.7% மற்றும் நகர்ப்புற பள்ளி குழந்தைகளில் 11.2% என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

உயர் இரத்த அழுத்தம் உள்ள குழந்தைகளுக்கு உடல் நிறை குறியீடு  கணிசமாக அதிகரித்திருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆரோக்கியமான உடல் நிறை குறியீடு உள்ளவர்களில் உயர் இரத்த அழுத்தத்தின் வீதம் 20ல் 1 ஆகவும், அதிக எடை கொண்டவர்களில் 20ல் 3 ஆகவும் இருந்தது. உடல் பருமனாக இருந்த கால்வாசிக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் இருந்தது. உயர் இரத்த அழுத்தம் உள்ள குழந்தைகளில், அதிக எடை மற்றும் உடற்பருமன், கிராமப்புற குழந்தைகளை விட நகர்ப்புற பள்ளி குழந்தைகளிடையே அதிகமாக இருந்தது. 2004 ஆம் ஆண்டில் லூதியானாவில் நடத்தப்பட்ட இதேபோன்ற ஆய்வில், உடற்பருமன்  நோய் பரவல் விகிதங்கள் குறைவாக இருந்தன. தற்போதைய ஆய்வில் அதிகரித்திருக்கும் பரவல் விகிதங்கள் இளம் பருவத்தினரிடையே வளர்ந்து வரும் சுகாதார அபாயங்களைக் நமக்கு உணர்த்துகின்றது.

 

 2004 முதல் 2016 வரையிலான தரவுகள் பள்ளி குழந்தைகளிடையே உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தம் அதிகரிப்பதாக காட்டுகிறது. [Data Source]

உடல் பருமன் அதிகரிப்பதற்கான காரணிகளை கண்டறிய ஆய்வாளர்கள் புள்ளிவிவர பகுப்பாய்வைப் பயன்படுத்தினர். உடல் பருமன் அதிகரித்த  குழந்தைகளுக்கு உயர் இரத்த அழுத்தம், அவர்களின் சமூக-பொருளாதார நிலை மற்றும் வசிப்பிடம் குறித்த தரவுகளை பகுப்பாய்விற்கு உட்படுத்தினர். இதில் உடற்செயல்பாட்டினை அதிகரிப்பதன் மூலம் உடற்பருமன் அதிகரிப்பது குறையக்கூடும் என்றும் கண்டறிந்தனர். அதிக எடை மற்றும் பருமனான குழந்தைகளிடையே உயர் இரத்த அழுத்தம், அதிக உப்பு உட்கொள்ளல், உடலில் இயக்க ஊக்கியான அதிகப்படியான ஸ்டீராய்டு உற்பத்தி மற்றும் இதய நோய் தொடர்பான பல காரணிகள் உடற்பருமன் நோயுடன் தொடர்புடையது என்று இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இளம் பருவத்தினரிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அதிக விகிதங்கள் உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களின் மாற்றம் முதலிய காரணிகளால் என  ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மாவட்ட அளவில் தரவுகள் சேகரிக்கப்பட்டிருந்தாலும் இந்த ஆய்வு முடிவுகள் வளரிளம் பருவத்தினரின் நோய் அபாயங்கள் குறித்து விவரிப்பதால் இன்றைய சூழலில் பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றது.

“பெரியவர்களில் இருதய நோய்கள் மற்றும் பல்வேறு வகையான வாழ்வியல் நோய்களை தடுக்க, வளரிளம் பருவத்தினரிடையே உள்ள நோய்க்காரணிகளை கண்டறிவது அவசியம். இதன் மூலமாக எதிர்காலத்தில் பல்வேறு வாழ்வியல் நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்” என்றனர் ஆய்வாளர்கள்.