முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

மிக்ரிலெட்டா ஐஷானி – கார்காலத்தில் கண்ணாமூச்சியாடும் வடகிழக்கிந்தியாவின் புதுத்தவளை இனம்!

Read time: 1 min
பெங்களூரு
11 ஜூலை 2019
மிக்ரிலெட்டா ஐஷானி – கார்காலத்தில் கண்ணாமூச்சியாடும் வடகிழக்கிந்தியாவின் புதுத்தவளை இனம்!

“அவல்தொறும் தேரை தெவிட்ட, மிசைதொறும்
வெங்குரல் புள்ளினம் ஒலிப்ப, உதுக்காண்,
கார் தொடங்கின்றால் காலை..”
453

குளங்கள் மற்றும் நீர் நிலைகளில் தவளைகளின் கரவோசையுடன் துவங்கியது கார்காலம் என்கிறது பேயனார் எழுதிய ஐங்குறுநூற்றுப் பாடல் ஒன்று.    தற்போதும் அதே அறிகுறிகளுடன் நாம் அடைமழை பொழியும் கார்காலத்தில் அடியெடுத்து வைத்துவிட்டோம். கொட்டித்தீர்க்கும் பருவமழையின் ஓசையோடு தவளைகளின் கரகரக்கும் கரைவொலியும் இணைந்து ஒலிக்கும் இந்த பருவமழைக்காலமானது பல தவளைகளுக்கு இனப்பெருக்கக் காலமாகவும் விளங்குகிறது.    ஆனால் அசாம் மாநிலத்தில் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ள தவளை இனமான மிக்ரிலெட்டா ஐஷானியிற்கு இந்த விதி பொருந்தாது.  பருவமழைக்காலத்தில் இனவிருத்தியில் ஈடுபடும் பிற தவளை இனங்களைப் போலில்லாமல், இந்த ஏய்ப்புத்தன்மைக் கொண்ட தவளை இனமானது பருவமழைக்காலத்தின் துவக்கத்திற்கு முன்னதே இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுவிட்டு பின்னர் ஆண்டுமுழுவதும் ஒளிந்து வாழக்கூடியவையாகும்.

ஆறு ஆண்டுகளாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட தீவிர  கள ஆய்வுப்பணிகளின் விளைவாக  தில்லி பல்கலைக்கழகம், இந்திய வனவுயிர் நிறுவனம் (Wildlife Institute of India), இந்தோநேசியாவின் அறிவியல் நிறுவனம் (Indonesian Institute of Sciences) மற்றும் அமெரிக்காவின் டெக்ஸஸ் பல்கலைக்கழகங்களைச் (University of Texas) சேர்ந்த ஆய்வாளர்கள் இந்த தவளை இனத்தை கண்டறிந்துள்ளனர். இவர்கள் இத்தவளையை முதன்முதலில் அசாமின் காச்சார் என்னும் மாவட்டத்தில்;  மனித குடியிருப்புக்களுக்கு அருகிலும், மனித நடவடிக்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட வனப்பகுதிகளிலும் கண்டறிந்துள்ளனர். மேலும்    திரிபுரா மற்றும் மணிப்பூர் மாநிலங்களிலும் இவற்றை கண்டுள்ளனர்.

“மனித குடியிருப்புகளுக்கு மிக அருகில் காணப்படும் சராசரியான தவளை இனங்கள் கூட இன்னும் சரியாக ஆவணப்படுத்தவில்லை என்பதை எங்கள் கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. மேலும் மனித செயல்பாடுகளின் விளைவாக அழிவின் விளிம்பிலிருக்கும் வடகிழக்கிந்திய தவளை இனங்களை  இனம் காணவும் அறிவியல் ரீதியில் ஆவணப்படுத்தவும் இன்னும் தீவிர களப்பணிகள் அவசியமாகிறது” என்கிறார் இந்திய வனவுயிர் நிறுவனத்தை சேர்ந்த இவ்வாய்வின் முதன்மை ஆசிரியரான முனைவர் அபிஜித் தாஸ். பீர்ஜெ (PeerJ) எனும் ஆய்விதழில் வெளியான இவ்வாய்வு இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை (Department of Science and Technology (DST), அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியம் (Science and Engineering Research Board (SERB)) மற்றும் அறிவியல் மற்றும் தொழில்சார் ஆய்வு மன்றம் (Council for Scientific and Industrial Research (CSIR)) ஆகியவற்றின் நிதி நல்கையுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளதால் மிக்ரிலெட்டா ஐஷானி யானது “வடகிழக்கு” என பொருள் கொள்ளும் சமஸ்கிருத சொல்லான “ஐஷானி”யைத் தழுவி பெயரிடப்பட்டுள்ளது. “வடகிழக்கிந்தியாவின் நெல் தவளை” (Northeast Indian paddy frog) எனும் வட்டாரப்பொதுப் பெயரினை இத்தவளைக்கு ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த தவளைச் சிற்றினமானது தென் கிழக்காசியா முழுதும் பரவலாக காணப்படும் வாய்-குருகிய நெல் தவளைகளை உள்ளடக்கிய பேரினமான மிக்ரிலெட்டாவின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த புது தவளை சிற்றினம் செம்பழுப்பு நிறத்துடனும் 2.2-2.8 செண்டிமீட்டர் அகலத்துடனும் அமையப்பெற்றுள்ளதோடு, பக்கவாட்டில் பிரதானமாக கருப்பு இழைவரிகளையும் சாம்பல் நிற புள்ளியமைவுகளையும் கொண்டுள்ளன. மேலும் இவை பருவமழைக்காலம் துவங்குவதற்கு முன்னர் மட்டுமே வெளியில் இயங்கும் தன்மை கொண்டது.

“கடந்த ஆறு ஆண்டுகளில் வடகிழக்கில் எங்களுக்கு இருக்கும் அனுபவத்தில், எங்களால் இந்த தவளைகளை பருவமழைக்காலங்களில் எங்கும் காணமுடிந்ததில்லை” என்கிறார் தில்லி பல்கலைக்கழகத்தை சார்ந்த இவ்வாய்வின் மற்றொரு ஆசிரியரான முனைவர் எஸ்.டி. பிஜு.

இந்த தவளையின் நடத்தை பண்புகள் மற்றும் சூழலியல் தன்மைகள் பற்றிய தகவல்கள் இன்னும் அறியப்படாமலேயே உள்ளது. ஆனால் ஆய்வாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக இவற்றை கண்டறிந்துகொண்டு வருகின்றனர்.

“இவற்றின் இனப்பெருக்கக்காலமானது மே மாதத்தின் இறுதியில் மட்டும் அதாவது ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடிக்கின்றது. இதனால் இவற்றின் நடத்தைப்பண்புகள் பற்றிய தகவல்களை அறிவது அரிதாகின்றது. ஆனால் தற்போதைய ஆய்வின் விளைவால் இத்தவளைகள் மிகவும் குறைவான காலத்திற்கு மட்டும் வெளியில் வந்து கரைவொலி எழுப்பி, இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு உடனே மறைந்து போகும் தன்மையுள்ள மிக விரைவான இனவிருத்தியாளர்கள் என்பதை நம்மால் அறிய முடிகின்றது”. என்கிறார் முனைவர் பிஜு. இந்த தவளைகள் வருடத்தின் மற்ற எந்த பருவத்திலும் வெளியில் காணப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.     

மிக்ரிலெட்டா ஐஷானியின் தாயனை (DNA) மாதிரிகளை தென் கிழக்கு மற்றும் கிழக்காசியாவில் அறியப்பட்டுள்ள நான்கு மிக்ரிலெட்டா  பேரினத்தைச் சேர்ந்த தவளைகளின் மாதிரிகளுடன் ஆய்வாளர்கள் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த  புதுத் தவளை மாதிரிகளின் தாயனை பண்புகள் மற்றும் இயற்பியல் பண்புகள் இதர மாதிரிகளிலிருந்து வேறுபட்டிருப்பதால் இவற்றை  ஒரு புது சிற்றினமாக வகைப்படுத்தியுள்ளனர்.  மேலும் இது போல் இன்னும் அறியப்படாத சிற்றினங்கள் தென் கிழக்காசிய நாடுகளான லாஓசு, கம்போடியா, தாய்லாந்து மற்றும் வியட்நாமில் இருக்கக்கூடும் எனவும்  தாயனை ஆய்வு முடிவுகள் அறிவுறுத்துகின்றன.

“இன்னும் இரு ஆண்டுகளில் பிரதானமாக தென் கிழக்காசிய பகுதிகளில் மட்டுமே 4 முதல் 5 சிற்றினங்களாவது இந்த பேரினத்தின் கீழ் கண்டறியப்பட்டு ஆவணப்படுத்தப்படும் வாய்ப்புள்ளது” என்று உறுதியுடன் கூறுகிறார் முனைவர் பிஜு. சமீபத்தில் சுமத்திரா தீவுகளில் 125 ஆண்டுகளிற்குப்பின் மிக்ரிலெட்டா இனோர்னாடா எனும் வேறொரு சிற்றினத்தை மறுமுறை கண்டறிந்த ஆய்வுக்குழுவில் முனைவர் பிஜுவும் இணைந்திருந்தமையால் இவர் மேற்க்கூறிய கருத்தை உறுதியாக முன் வைக்கின்றார்.

இது போல பல புதுத்தவளை இனங்கள் உலகம் மற்றும் நாடெங்கும் கண்டறியப்பட்டு வருவதின் விளைவாக பழைமையான இவ்விலங்குகளின்  உயிர்புவியியல் மற்றும் பரிணாம ரீதியில் புதிர்களாக விளங்கிய  பல விடையரியா வினாக்களுக்குத் தற்போது விடைக்காண முடிகிறது.