முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

ஈரல் அழற்சி நோய்க்கு ஒரு மூலிகை தீர்வு - ஆய்வில் தகவல்

Read time: 1 min
Bengaluru
12 டிச 2019
ஈரல் அழற்சி நோய்க்கு ஒரு மூலிகை தீர்வு - ஆய்வில் தகவல்

ஈரல் அழற்சி (Hepatitis) சி என்பது ஒருவகை தொற்றுநோய். இது ஹெப்பாடிட்டீஸ் சி  எனும் ஈரல் அழற்சி நச்சுநுண்மத்தினால் (virus) உண்டாக்கப்படுகின்றது. இந்த நச்சுநுண்மம் ரத்தத்தின் மூலமாக பரவுகின்றது. நரம்பு மருந்திற்கு பயன்படுத்தப்படும் ஊசிகள் மற்றும் ரத்த தானத்தின் போது பயன்படுத்தப்படும் சுகாதாரமற்ற மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றினால் இந்த நச்சுநுண்மம் பரவக்கூடும். இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட பல வருடங்களுக்குப் பிறகும் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித அறிகுறிகளும் இல்லாமல்  தெரியலாம். ஆனால், இந்நோய் நீண்ட கால விளைவுகளை ஒருங்கே கல்லீரல் செயலிழப்பு மூலமாக வெளிப்படுத்தும். நம் நாட்டில் இந்நோயினால் எண்பது லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இது தேசிய அளவில் மிகப்பெரும் சுமையாகவும் சவாலாகவும் விளங்குகின்றது. இந்த நோய் குறித்த விழிப்புணர்வும், நோயாளிகளின் மேல் செலுத்தப்படும் சமூக புறக்கணிப்புகளும் இதனை கட்டுப்படுத்துவதில் பெரும் சவாலாக உள்ளன. மேலும், இந்த நோயினை உண்டாக்கும் நச்சுநுண்மம் மருந்திற்கெதிரான எதிர்ப்பு சக்தியினை பெற்றுவருவதால்  இந்நோயினை கட்டுப்படுத்துவது மிகப்பெரும் சவாலாக உள்ளது.

இந்திய அறிவியல் மையத்தினை (Indian Institute of Science (IISc)) சேர்ந்த விஞ்ஞானிகளின் குழு ஒன்று சமீபத்தில் இந்த நச்சுநுண்மத்தினை அழிக்கும் தன்மை கொண்ட மூலக்கலவையினை தாவரத்திலிருந்து கண்டறிந்துள்ளனர். மூக்கரட்டி சாரை அல்லது மூக்கிரட்டை (Boerhavia diffusa) எனும் தாவரம் பல ஆயுர்வேத மருந்துகளில் பயன்படுத்தப்படுவது. இது உடலுக்கு புத்துணர்வினை நல்குவதாக பல ஆயுர்வேத மருத்துவக் குறிப்புகள் கூறுகின்றன. சமீபத்தைய ஆய்வில் டீஹைட்ரோரோடெனாய்டு பாயேரவினொன்- எச் (dehydrorotenoid boeravinone H) எனும் வேதியல் மூலக்கலவையினை கண்டறிந்ததோடு இந்த மூலக்கலவை ஈரல் அழற்சி நச்சுநுண்மத்தினை மட்டுப்படுத்துவதாகவும் கண்டறிந்துள்ளனர். ஈரல் அழற்சி நச்சுநுண்மம் உயிரணுக்களில் நுழைவதையும், உயிரணுக்களுடன் தொடர்புகொள்வதையும் இந்த மூலக்கலவை எந்தவித பக்க விளைவுகளும் இன்றி தடுப்பதையும் இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. இந்த மூலக்கலவை செயலியில் ரீதியாக எப்படி இயங்குகின்றது என்று தற்போது ஆய்வுசெய்து கொண்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள்,  ஈரல் அழற்சி நச்சுநுண்மத்திற்கு எதிராக புதிய மருந்துகள் கண்டறிவதற்கான சாத்தியக்கூறுகளை நமக்கு  வழங்கியுள்ளது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை மருத்துவமுறைகளில் இக்காலத்தின் தேவைகளும் பொதிந்திருக்கின்றன என்பது பெரும் ஆச்சர்யமே!