முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

மாணவ்- மனித உடல் வரைபடத் திட்டத்தை கட்டமைக்க தற்போது மாணவர்களே உதவலாம்

Read time: 1 min
Pune
22 அக் 2020
மாணவ்- மனித உடல் வரைபடத் திட்டத்தை கட்டமைக்க தற்போது மாணவர்களே உதவலாம்

படம்: மாணவ் திட்டத்தின் முகநூல் பக்கம்

2019 ஆம் ஆண்டில், இந்திய அரசின் உயிரிதொழில்நுட்பத்துறை (DBT), பூனேவிலுள்ள இந்திய அறிவியல், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்  (IISER Pune),  புனேவின் தேசிய உயிர்மி அறிவியல் மையம் (NCCS) மற்றும் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் லிமிட் என்னும் நிறுவனமும் இணைந்து ஒரு பேராவலுடைய திட்டத்தை முன்னெடுத்தனர். மாணவ்- மனித உடல் வரைபடத் திட்டம் (The Human Atlas Initiative) என்னும் இந்தத் திட்டம், அறிவியல் ஆய்வறிக்கைகள் மற்றும் பொதுத் தரவுத்தளங்களில் இருக்கும் நம் மனித உடல் சார்ந்த தகவல்களை திரட்டி திசுக்கள், செல்கள் மற்றும் மூலக்கூற்று நிலைகள் வரையிலான அறிவுடன் ஒரு முழூ மனித உடல் வரைபடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் இத்தகைய முன்னெடுப்பு இதுவே முதல் முறையாகும். ஆரோக்கியமான மற்றும் நோயுற்ற நிலைகளில் நம் உடல் உறுப்புகள் மற்றும்  திசுக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை அறிவதன் மூலம் நம் உடலைப்பற்றிய முழு புரிதலை நாம் அடைய இந்த மனித உடல் வரைபடத் திட்டம் நமக்கு உதவுகிறது. மனித உடல் சார்ந்த அறிவில் நமக்கிருக்கும் இடைவெளிகளை நிரப்பி புதிய மருந்துகள் மற்றும் சிகிச்சைமுறைகளை நாம் கண்டறிய இந்தத் திட்டம் நமக்கு துணை நிற்கும்.

இத்திட்டத்தின் முதல் பகுதி 2021 ஆம் ஆண்டின் இறுதியில் முடிவடையும் வகையில் நகர்ந்துக்கொண்டிருக்கின்றது. இந்த திட்டத்தின் முதல் பகுதியில் நம் உடலின் உறுப்பான தோலினைப் பற்றிய தகவல்களை ஒரு குழுவானது திரட்டி அத்தரவுகளை அனைவருக்கும் புரியும் வகையில் ஒரு தெளிவான, எளிதில்-பயன்படுத்தக்கூடிய அறிவாதாரமாக பொதுத்தளத்தில் நிறுவ உள்ளது. மக்கட்திரள் (crowd source) கூட்டுமுயற்சியினை அடிப்படையாக கொண்ட இத்திட்டத்தின் தரவுத்தளங்களில் பங்களிக்க, தற்போது நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களை இந்த திட்டத்தில் பங்களிக்க மாணவ் திட்டக்குழு அழைப்பு விடுக்கிறது இது அறிவியல் மற்றும் மருத்துவ சமூகங்கள் பெரிதும் பயன்பெற உதவியாக இருக்கும். மேலும் மாணவர்கள் இதில் பங்கெடுப்பதன் மூலம் அறிவியல் ஆய்வுகளை படித்தும் அவற்றிலிருந்து தேவையான தகவல்களை தொகுக்கும் திறன்களை மேம்படுத்தவும் அவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.

புதிதாக மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பெரும்பாலும் முந்தைய ஆய்வுமுடிவுகளின் தொடர்ச்சிகளாகவே இருக்கும். இத்தகைய ஆய்வு முடிவுகள் பல்வேறு ஆய்விதழ்களில் வெளியான ஆய்வறிக்கைகள், ஆய்வுத்தொகுப்புகள், மற்றும் தரவுத்தளங்கள் உட்பட பல்வேறு இடங்களில் சிதறி இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட ஆய்வறிக்கையில் முக்கியமான பகுதிகளை மட்டும் குறித்து வைப்பது உரைவிளக்கம் செய்தல் (annotation) எனப்படும். இம்முறையானது, ஒரு அச்சுப்பிரதியில் நாம் ஒரு பேனாவைக்கொண்டு குறிப்பெடுப்பதற்கு சமமாகும். ஆய்வாளர்கள் பெரும்பாலும் தாங்கள் படிக்கும் ஆய்வறிக்கைகளில் இதுபோன்ற குறிப்புக்கள் மூலம் தரவுகளை சேகரிப்பது வழக்கம். “இம்முறை ஆய்வாளர்கள் தாங்கள் படிக்கும் அறிக்கைகளைப் புரிந்து கொள்ளவும் அவற்றின் அறிவியல் தகவல்களிலிருக்கும் இடைத்தொடர்புகளை கவனிக்கவும் உதவுகின்றது.  மேலும் ஒரு ஆய்வில் பயன்படுத்தப்பட்ட முக்கிய செயல்முறைகள் மற்றும் ஆய்வுக்கருவிகளைப் பற்றிய தகவல்களையும் திரட்ட இது உதவுகின்றது” என்கிறார் திரு.நாகராஜ் பாலசுப்பிரமணியன். இவர்  பூனேவிலுள்ள இந்திய அறிவியல், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின்  (IISER Pune) பேராசிரியராவார். மேலும் இவர் அந்நிறுவனத்தில் மாணவ் முன்னெடுப்பை தலைமையேற்று நடத்தி வருகிறார்.


கடந்த ஆண்டு பூனே பல்கலைகழகத்தில் நடந்த பயிரலரங்கில் பங்குபெற்றோர்கள் (படம்: மாணவ் குழு)

இத்திட்டத்தில் பங்கெடுக்க முன்வரும் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் ஆய்வறிக்கைகள் அல்லது கட்டுரைகள் ஒருவருக்கு ஒரு நேரத்தில் ஒன்று என்னும் அடிப்படையில் தரப்படுகின்றது (தற்பொழுது இந்த திட்டத்தின் முதல் பகுதியில் மனித தோல் சம்பந்தப்பட்ட ஆய்வுகள் மட்டுமே மையப்படுத்தப்படுகின்றது). அவர்கள் இதை படித்து பின்னர் உரைவிளக்கங்களை அவற்றோடு சேர்ப்பார்கள்.  இதை ஒரு இயங்குதள மென்பொருள் தொகுத்து ஒரு தரவுத்தளத்தில் சேமிக்கும்.  இவ்வாறு தொகுக்கப்பட்ட தரவுகளை ஆய்வாளர்கள் பின்னர்  எளிதாக அணுக முடியும். இதன்மூலம் ஒரு மிகப்பெரும் அறிவியல் கட்டுரைக் கடலிலிருந்து நமக்குத்தேவையானத் தகவல்களை மட்டும் சேகரிக்கவும் அவற்றை இணைக்கவும் தேவைப்படும் நேரம் கணிசமாக குறைகின்றது. சுமார் 15000 மாணவர்கள், 250 ஆசிரியர்கள், 160 விமர்சகர்கள்/மதிப்பீட்டாளர்கள் மற்றும் 140 துறைசார் வல்லுநர்கள் இதில் இதுவரை ஆர்வத்துடன் பங்கெடுத்துள்ளனர். 

“மாணவர்கள் தொகுக்கும் உரைவிளக்கங்கள் இரண்டு நிலை பரிசீலனைக்கு உட்படுத்தப்படும். எனவே மாணவ பங்களிப்பாளர்களோடு இணைந்து துறைசார் வல்லுநர்கள் விமர்சகர்கள், மற்றும் மதிப்பீட்டாளர்கள் தேவைப்படுகிறார்கள்” என குறிப்பிடுகிறார் “மாணவ்” இன் திட்ட மேலாளரன அர்ச்சனா பெரி. “இங்கே துறைசார் விமர்சகர்களாக பங்களிக்க அனுபவம் வாய்ந்த முனைவர் பட்ட ஆய்வாளர்கள், முனைவர் பட்டம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் ஆசிரியர்களை எதிர்பார்க்கின்றோம்” என அவர் இந்த திட்டத்துடன் தொடர்புடைய மனிதவளத்தை பற்றி விவரிக்கிறார்.

பங்களிப்பாளர்கள் தங்களின் உரை விளக்க குறிப்புகளை பல்வேறு வரையறுக்கப்பட்ட பகுப்புகளாக பிரிக்கவும் பின்னர் பெயரிட்டு வகைப்படுத்தவும் இந்த இயங்குதளம் வழிவகை செய்கிறது.  இக்குறிப்புகள் ஒரு உடலுறுப்பின் உருவ அமைப்பு, அவற்றை தாக்கக்கூடிய நோய்கள், அதை கையாளத் பயன்படுத்தப்படும் மருந்துகள் அல்லது அவற்றின் உயிரணுக்களின் செயல்பாடுகளுடன் தொடர்புடைய மரபணுக்கள் அல்லது பாதவாய்களைப் பற்றியதாக இருக்கக்கூடும்.

“உரைவிளக்கக் குறிப்புகளுடனான இந்த வகை தரவுத்தளமானது ஒரு உடலுறுப்பு அல்லது திசுவினை மையப்படுத்திய பல்வேறு துறைகளில் இருந்து தகவல்களை உள்ளடக்கியிருக்கும். எடுத்துக்காட்டாக, ஒருவர் தோல் நார்முன்செல் (skin fibroblasts) என்னும் ஒருவகையான தோல் செல்களைப்பற்றி தேடினால், அவர்களுக்கு அதோடு தொடர்புடைய தகவல்கள் பல்வேறு துறைகளிலிருந்து கிடைக்கும். அந்த செல்களின் ஆயுட்காலம் மற்றும் அவற்றின் ஊர்கை திறன் போன்ற தகவல்களும் இதில் அடங்கும்” என விவரிக்கிறார் திரு நாகராஜ்.


சமீபத்தில் நடந்த மாணவ் திட்ட வலையரங்கின் படம் (படம்: மாணவ் குழு)

இந்த மாணவ் உரைக்குறிப்பு இயங்குதளமானது அகச்செயலாக்க கருவிகளைக் கொண்டு பொதுவளத்தில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு தகவாக்க மற்றும் மறுபயனுறு மென்பொருள் தீர்வாகும். மேலும், ஒரு தெரிவாளரால் உள்ளிடப்படும் கைவழி உரைவிளக்கங்களை பரிசீலிக்க ஒரு  மதிப்பீட்டு அமைப்பையும் இது உள்ளடக்கியுள்ளது. இந்தத் திட்ட வடிவமைப்பின் சாத்தியக்கூறுகளை நிரூபிக்கும் விதமாக இக்குழுவானது தங்களின் உரை விளக்க வழிமுறைகள், தரவு சேகரித்தல் மற்றும் தரவை சரிபார்தல் முறைகளை  சுமார் 100 மாணவர்களைக் கொண்ட ஒரு பயிலரங்கில் சரிபார்த்தும் உள்ளனர்.  அடுத்த கட்டமாக இத்திட்டமானது, ஒரு தானியங்கி முறை மூலம் ஆய்வறிக்கைகளை வரையறுத்து அவற்றை மாணவர்களுக்கு பங்கிட்டு கொடுப்பதை திட்டவரைவாகக் கொண்டு நகர்கிறது.

“பல்வேறுபட்ட துறைகளின் பங்களிப்பு இருப்பதால், அதனால் விளையும் தன்மைப் பண்பை கருத்தில் கொண்டு விரிவான மற்றும் பயனுள்ள உரை விளக்கங்களை உருவாக்குவது ஒரு சவாலான காரியமாகும். இதைக் கருத்தில் கொண்டு, பொறிக்கற்றல் (Machine Learning) மற்றும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) முறைகள் மூலம் தரவுகளை உரை விளக்கி, தெரிந்தெடுத்து உருவகிக்க தேவைப்படும் சாத்தியக்கூறுகளை மாணவ் குழு தற்போது தேடி வருகின்றது” என்கிறார் புனேவின் தேசிய உயிர்மி அறிவியல் மையத்தை சார்ந்த கிரிஷ்னசாஸ்திரி. “இந்த இயங்குதளத்தில் பொறிக்கற்றல் மூலம் தானியங்கி உரைவிளக்கங்களை மேற்கொள்ளக்கூடிய ஒரு வழிவகையும் அமைக்கப்பட்டுள்ளது” எனக் கூறுகிறார் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸை சார்ந்த திட்ட ஆய்ஞர் அனாமிகா க்ரிஷ்னபால்.

அறிவியல் வாசிப்பை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தவும், தரவு அறிவியல் மற்றும் அதன் பயன்பாட்டுகளை (குறிப்பாக உயிரியலில்) அவர்களுக்குப் பழக்கவும் மாணவ் திட்டமானது பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. “கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இதுகுறித்த ஆய்வரங்குகளை நடத்துவதே எங்கள் நோக்கமாக இருந்தது. ஆனால் கொரோனா நோய்த்தொற்றால் தற்போது நாங்கள் இணையவழி வலையரங்குகளை நடத்திய வருகிறோம்” என தெரிவிக்கிறார் திரு. நாகராஜ். இந்தக் குழு “எவ்வாறு அறிவியல் ஆய்வறிக்கைகளை வாசிப்பது?” என்னும் தலைப்பில் சுமார் 70 வலையரங்குகளை இதுவரை நடத்தியுள்ளனர். இதில் சுமார் 7000 பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் உலகின் பல்வேறு ஆய்வாளர்களால் நடத்தப்படும் தரவு அறிவியல் குறித்த ஒரு தொடர் வலையரங்கு நிகழ்வையும் துவக்கியுள்ளனர்.   இது மாணவ்வின் யுடியூப் அலைத்தளத்தில் அனைவரின் பார்வைக்காக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.   இதுவரை நடத்தப்பட்டுள்ள 12 வலையரங்குகளில் சுமார் 4000 பங்கேற்பாளர்கள் நாடுமுழுவதிலிருந்து கலந்துகொண்டுள்ளனர்.

“எங்களின் தற்போதைய பணியானது மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ் திட்டத்தைப்பற்றியும் அத்திட்டத்தின் நோக்கங்களை பற்றியும் அறிந்திருக்கிறார்கள் என்பதை உறுதிசெய்வதே ஆகும். இந்த தேசிய முன்னெடுப்பில் அவர்களும் ஆர்வத்துடன் பங்கெடுப்பார்கள் என நாங்கள் நம்புகிறோம்” என்கிறார் திரு.நாகராஜ். பின்னர், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், மருத்துவர்கள் மற்றும் மருந்தாளர்களையும் இவர்களுடன் இணைத்து  இந்த தரவுத்தளத்தை மேலும் வலிமையாகக் கட்டமைக்க திட்டமிட்டுள்ளனர். அதோடு நில்லாமல், பல்வேறு கூட்டுத்தரவுகளை அனைவரும் எளிதாக தேடும் விதமாக ஒரு எளிய பயனாளர் இடைமுகத்தின் உதவியோடு  தங்களின் தரவுகளை  உருவகப்படுத்தும் முயற்சியில் இத்திட்டக்குழு தற்போது ஈடுபட்டுள்ளனர்.