முடக்கு வாதம்  (Rheumatoid Arthritis) எனப்படும் நோயானது முதன்முதலில் 19ஆம் நூற்றாண்டில் கண்டறியப்பட்டதாகும். இன்றளவில் உலகின் சுமார் 1-2% மக்களை இந்த நோய் தாக்குகின்றது.  ஓர் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை விடுத்து, அந்த உடலின் திசுக்களை, குறிப்பாக மூட்டுகளைத் தாக்கி, பாதிப்பு ஏற்படுத்துவதே இந்நோய்க்குக் காரணமாகும்.

நகரத்துப்பல்லிகளின் வீதிச்சாதுரியங்கள்!

Read time: 1 min
பெங்களூரு
24 அக் 2019
நகரத்துப்பல்லிகளின் வீதிச்சாதுரியங்கள்!

“முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்,
வருவம்’ என்னும் பருவரல் தீர,
படும் கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி…….”,

169 - நற்றிணை

என வீட்டின் நெடுஞ்சுவர்களில் வாழ்ந்து தலைவனின் வருகையை தலைவிக்கு உணர்த்தும் பல்லிகளைப்பற்றிய குறிப்புடன் இயற்றப்பட்டுள்ளது நற்றிணைப்பாடல் ஒன்று. மனிதர்கள் வாழும் சுவர்வீடுகளை பல்லிகளும் தங்கள் வாழ்விடங்களாக கொண்டிருந்ததை உற்றுநோக்கி குறித்து வைத்துள்ளனர் நம் சங்ககால புலவர்கள். இன்றளவிலும் பல்லிகளோடு மனித வாழ்விடங்களுக்கு உள்ள இணக்கம் அதே நிலையில் தான் உள்ளது. ஆனால் தற்போதைய நகரமையமாக்களும், அடுக்குமாடி காரைக்கட்டிடங்களும் நம் ஈராயிரமாண்டு வீட்டுத்தோழர்களான பல்லிகளை எவ்வாறு பாதித்துள்ளன?

“பூங்காக்களின் நகரம்” என முன்னர் அழைக்கப்பட்ட பெங்களூரு இன்று நகரமயமாக்களின் விளைவாக தன் பசுமை கம்பளத்தை சாம்பல் நிற காரைக் கட்டிடங்களால்  மூடிக்கொண்டுள்ளது. அந்நகரத்தில் இவ்வாறு முளைத்த கட்டிடங்கள், அங்கே  வாழ்ந்த மனிதர்களின் வாழ்விடங்களை மட்டுமல்லாமல் ஏனைய விலங்கினங்களின் வசிப்பிடங்களையும் கனிசமாக மாற்றியமைத்துள்ளன. இவ்வாறு மாறிக்கொண்டிருக்கும் இந்த நவீன உலகில் தங்களை தகவமைத்துக்கொள்ளும் ரீதியில், இங்கே வசிக்கும் விலங்குகளும் நம்மைப்போலவே பல யுக்திகளை பழகி வைத்துக்கொண்டுள்ளன. இதை விளக்கும் வகையாக பெங்களூருவின் இந்திய அறிவியல் நிறுவனத்தின் (Indian Institute of Science (IISc)) சமீபத்திய ஆய்வொன்றில் பெங்களூருவின் புறநகரப்பகுதிகளின் பல்லி இனங்கள் தங்கள் கிராமப்புறத் தோழர்களைவிட வீதிச்சாதுரியத்துடனும், மாற்றங்களை வேகமாக பயிலும் ஆற்றலுடனும் இருக்கின்றன என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.     

இரை தேடுவது, பாதுகாப்பான இருப்பிடங்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் ஆபத்துக்களைக் கண்டறிவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட பல்லிகள் பல்வேறு திறன்களை பயன்படுத்துகின்றன. தாங்கள் வாழும் நிலப்பரப்புகளின் பாதுகாப்பான அல்லது ஆபத்தான அம்சங்கள் மற்றும் நிலச்சுவடுகளை நினைவில் வைத்துக்கொள்ளுவதன் மூலம் அவை மேற்கூறிய நடவடிக்கைகளை செயல்படுத்துகின்றன. கிராமப்புறங்களில் இந்த அம்சங்கள் பெரிதாக மாற்றம் அடைவதில்லை. ஆனால் புறநகர் பகுதிகளில் அவை தற்போது அதீத மாற்றத்திற்கு உள்ளாக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் உயிர் பிழைக்க வேண்டுமேயானால், இங்குள்ள பல்லிகளும் இம்மாற்றங்களை மிக விரைவாக பயின்று, நினைவில் நிறுத்தி, தங்கள் நடத்தைகளை அவற்றின் அனுபத்தின் துணையுடன் மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

பையாலஜி லெட்டர்ஸ் எனும் ஆய்விதழில் வெளியான இந்த ஆய்வில் சாமொபிலஸ் டார்சாலிஸ் (Psammophilus dorsalis) எனும் பல்லி இனத்தின் பயிலும் திறனை ஆய்வாளர்கள் ஆராய்ந்துள்ளனர். இந்த பல்லி இந்திய பாறை பல்லி என்று தமிழிலும், Indian rock agama என்று ஆங்கிலத்திலும் அழைக்கப்படுகிறது. ஆய்வாளர்கள் முதலில் இப்பல்லி இனத்தின் வயது வந்த சில ஆண்களை கிராமப்புறங்கள் மற்றும் பெங்களூருவின் புறநகர் பகுதிகளிலிருந்து பிடித்து, நடுவில் ஒரு தடுப்பு மற்றும் இரண்டு அடைவிடங்களுடன்  அமைக்கப்பட்ட ஒரு கூண்டில் விட்டுள்ளனர். பி.வி.சி குழாய்களாலான இந்த இரு அடைவிடங்களும் கூண்டின் இரு மூலைகளில் வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர் இரண்டு விதமான சோதனைகளின் அடிப்படையில் இப்பல்லிகள் அந்த அடைவிடங்களின் பாதுகாப்புத்தன்மையை எவ்வாறு பயில்கின்றன என்பதை இவர்கள் மதிப்பிட்டுள்ளனர். 

முதல் சோதனையில், இவ்விரண்டு அடைவிடங்களில் ஒன்று மட்டும் “பாதுகாப்பானதாக” கருதப்படும் வகையில் சிகப்பு சதுரத்தால் குறிக்கப்பட்டிருக்கும். இந்த  அடைவிடம் தான் பாதுகாப்பானது என பல்லிகளுக்கு கற்றுக்கொடுக்க, ஆய்வாளர்கள் முதலில் பல்லிகளின் வாலினை ஒரு தூரிகையினால் மென்மையாக வருடிவிட்டு,  விரட்டியுள்ளனர். இச்செயலானது கொண்றுண்ணியின் தாக்குதலைப்போனற சூழலை பல்லிகளுக்கு ஏற்படுதும் ஒரு முயற்சியாகும். இவ்வருடலின் விளைவாக பல்லிகள் “பாதுகாப்பானதாக” குறிக்கப்பட்ட அடைவிடத்தைத் தவிர வேறு அடைவிடத்திற்குள் அடையுமேயானால், அவற்றை மீண்டும் தாக்கி வெளியே வரவைத்துள்ளனர். சிறிது நேரத்திற்குப்பின், பல்லிகள் சிகப்புச்சதுரம் கொண்ட அடைவிடம் மட்டுமே பாதுகாப்பானது என்பதை பயின்று அவ்விடத்தில் மட்டுமே  அடைய துவங்கியுள்ளன.

இரண்டாவது சோதனையில் மேற்க்கூறிய சூழலை நேர்மாறாக மாற்றியுள்ளனர் ஆய்வாளர்கள். தற்போது சிகப்பு சதுரத்தால் குறிக்கப்படாத அடைவிடமே பாதுகாப்பானதாக கருதப்பட்டது. தற்போது பல்லிகள் சிகப்பு சதுரத்தால் குறிக்கப்படாத அடைவிடத்தில் அடைந்தால் மட்டுமே அவை தாக்கப்படாமல் இருத்தன. இச்சோதனை மூலம் பல்லிகள் எவ்வாறு தாங்கள் முன்னே பயின்ற தொடர்புகளை மாற்றியமைத்து புது அடைவிடத்தை பாதுகாப்பானதாக பயில்கின்றன என ஆவணப்படுத்தியுள்ளனர்.  

இந்த இரண்டு சோதனைகளிலுமே, புறநகர் பல்லிகள் கிராமப்புற பல்லிகளை விட சிறப்பாக செயலாற்றி, எது பாதுகாப்பான அடைவிடம் என்பதை மிக வேகமாக பயின்றுள்ளன. இதைப்பயில கிராமப்புற பல்லிகளிற்கு சுமார் 14 முயற்சிகள் தேவைப்பட்ட நிலையில் புறநகர் பல்லிகள் அதை ஏழே முயற்சிகளில் பயின்றுள்ளன. பழைய தொடர்புகளை மறந்து புதிய மாற்றங்களை பயின்று நினைவில் கொள்ளும் திறனை சோதித்ததன் மூலம் இப்பல்லிகளின் அறிதல் திறனில் ஒரு நெளிமை இருப்பதை இவ்வாய்வின் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளது.

சுவரசியமாக, இவ்வாய்வின் முடிவுகள் லாம்ப்ரோஃபொலிச் டெலிகாடா  (Lampropholis delicata) எனும் தோட்டப்பல்லி இனத்தில் மேற்கொள்ளப்பட்ட இதே போன்றதொரு ஆய்விலிருந்து மாறுபட்டு நிற்கின்றது. அவ்வாய்வில், நகரம் மற்றும் கிராமப்புறப் பல்லிகளின் பயிலும் ஆற்றலில் எந்த வித்தியாசமும் கண்டறியப்படவில்லை. பல்லிகளின் நகரப்புற சூழலினால்  அவை எதிர்கொள்ளும் பரிணாம தேர்வழுத்தங்களில் இருக்கும் வேறுபாடுகளே இதுபோன்ற பயிலும் திறன் மாறுதல்களுக்கு காரணிகளாக அமைகின்றன என விளக்குகின்றனர் ஆய்வாளர்கள்.

புறநகரத்து பாறைப்பல்லிகள் தங்கள் வாழ்நாளில் எதிர்கொள்ளும் அதீத சூழலியல் மாற்றங்கள்தான் அவை பாதுகாப்பான அடைவிடங்களை எவ்வளவு வேகமாக பயில்கின்றன என்பதை தீர்மானிக்கின்றது. புறநகர் பல்லிகளின் இந்த அதீத அறிதல் திறனானது, கிராமப்புற பல்லிகளைக் காட்டிலும், அவை சந்திக்கும் அதீத சூழ்நிலை மற்றும் பரிணாம மாறுதல்கள் மற்றும்  ஒரு தனிப்பட்ட பல்லி தன் வாழ்நாளில் எதிர்கொள்ளும் மாற்றங்கள் ஆகிவற்றாலோ அல்லது இவ்விரண்டு காரணிகளின் கூட்டாகவோ  விளைந்திருக்கக்கூடும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.   

இவ்வாய்வின் முடிவுகள், விலங்குகள் எவ்வாறு தங்கள் நடத்தைகளை மாறிவரும் நகரமையமாக்களிற்கு ஏதுவாக மாற்றிக்கொள்ளுகின்றன என்பதை உணர்த்துகிறது. மேலும், பெருநகரங்களில் வாழுவதற்காக மனிதர்கள் மட்டுமல்லாமல் விலங்கினங்களும் தங்களை வேகமாக மாற்றக்கொள்ளுகின்றன என்பது இதுப்போன்ற ஆய்வுகளின் மூலம்  தெளிவாகிறது.